ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு அறிக்கை

காவிரி : திமுக துரோகத்தை நிரூபித்தால்

அரசியலில் இருந்து ஸ்டாலின் விலகுவாரா?

காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவசாயிகளில் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்களில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு, அவை குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறைகூவல் விடுத்திருந்தார். அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாத ஸ்டாலின், ஒரு மாவட்ட செயலாளர் மூலம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

திமுக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட செயலர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை நாங்கள் நன்றாக அறிவோம். ஸ்டாலினைப் போன்று எதிர்மறை அரசியல் செய்யத் தெரியாத மனிதர் அவர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளில் பெரும்பாலானவற்றை தமது வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் பயன்படுத்தியிருக்க மாட்டார். மருத்துவர் அன்புமணி மீதான தமது ஆத்திரத்தை தணித்துக் கொள்ள பன்னீர்செல்வத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 50 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் தொடங்கி வைத்த கலாச்சாரத்தை திமுக இன்னும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவும் நாகரீகப் பாதைக்கு மாற வேண்டும்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்வதைப் போன்று காவிரிப் பிரச்சினையில் திமுக செய்த துரோகங்களுக்கு பதில் கூறுங்கள் என்று கேட்டால், அதை விடுத்து  தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனத்தில் திமுக இறங்கியிருக்கிறது. பேரறிஞர் அண்ணா தொடங்கிய இயக்கத்தின் இன்றைய நிலையை நினைத்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. மீண்டும் சொல்கிறேன்... காவிரிப் பிரச்சினையில் தொடங்கி நெடுவாசல் வரை உழவர்கள் சார்ந்த அனைத்து சிக்கல்களிலும்  திமுக செய்த துரோகங்கள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகளுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன? இந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஏற்கத்தக்க வகையில் பதில் கூறி விட்டால் திமுக உழவர்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்பதை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து புகார் கூறியவர்கள் மீது அவதூறு பரப்புவது தான் தம்பிகளுக்கு அண்ணா கற்றுக்கொடுத்த கண்ணியக் கலாச்சாரமா?

திமுகவின் காவிரி துரோகம் குறித்து பொது அரங்கில் விவாதத்திற்கு தயாரா? என்று அழைத்தால், எங்கள் தளபதி எப்போதும் பொது அரங்கில் நின்று கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பன்னீர்செல்வத்திடமிருந்து பதில் வருகிறது. என்னவொரு புத்திசாலித்தனமான பதில்? பொது அரங்கில் துண்டுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு நினைத்ததை பேசுவதற்கும், மக்கள் நலன் சார்ந்த சிக்கலில் திமுக செய்த துரோகம் குறித்த ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாற்றுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பதில் கூறுவதற்கும் இடையிலான வித்தியாசத்தை பன்னீர்செல்வத்திற்கும், அவரது செயல்தலைவர் ஸ்டாலினுக்கும் பேராசிரியர் போன்ற அவைநாகரீகம் அறிந்த தலைவர்கள் கற்றுக்கொடுப்பது நல்லது.

போர்க்களத்தில் தளபதியாக இருப்பவர்கள் தான் முன்னின்று படைகளை வழிநடத்திச் செல்வார்கள். அது தான் போர் தர்மம். மாறாக பன்னீர்செல்வம் போன்றவர்களை மனிதக் கவசங்களாக முன்னிறுத்தி பின்னால் ஒளிந்து கொள்வது தளபதிகளுக்கு அழகல்ல... பெருமையும் அல்ல. பொதுவிவாதத்திற்கு வரும்படி மு.க.ஸ்டாலினை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பது விளம்பரத்திற்காக அல்ல.  விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய சூழலிலும் அவர் இல்லை. சுகாதாரத்துறையிலும், புகையிலை ஒழிப்பு பணியிலும் சாதித்ததற்காக அமெரிக்காவின் புற்றுநோய் சங்கம் வழங்கிய லூதர் டெர்ரி விருது உட்பட 4 சர்வதேச விருது வாங்கிய பிறகும் தன்னடக்கத்துடன் இருப்பது யார்? கெண்டுக்கி விருதை விலை கொடுத்து வாங்கி அதற்காக பாராட்டு விழாக்களை நடத்தியது யார்? என்பதைப் பார்த்தாலே  விளம்பரத்திற்காக அலைபவர்கள் யார்? என்பதை மிகவும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏ.சி. அரசியல் செய்வதாக பன்னீர்செல்வம் கூறியிருப்பது கண்டிக்கத் தக்கது. வாட்டும் வெயிலில் தான் மதுவிலக்கு போராட்டங்களை மருத்துவர் அன்புமணி நடத்தினார்; நான் விரும்பும் சென்னை விழிப்புணர்வு பயணத்தை  சென்னை முழுவதும் மேற்கொண்டார். மாறாக   குளிரூட்டப்பட்ட அரங்கங்களில் கலந்தாய்வுகளை நடத்தியதும், சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போதும் கூட குளிரூட்டபட்ட அரங்கத்தில் தான் தங்குவேன் என்று கூறி ரூ.7 லட்சத்துக்கு திருமண அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டதும் ஸ்டாலின் தான் என்பது பன்னீர்செல்வத்திற்கு தெரியாது போலிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக கரும்புத் தோட்டத்திற்குள்  கூட கான்க்ரீட் பாதை அமைத்தால் தான் வருவேன் என்று அடம்பிடித்தவர் தான் உங்கள் தளபதி என்பதை நமக்கு நாமே பயணத்தில் அவருடன் சென்றவர்களிடம் பன்னீர்செல்வம் கேட்டறிய வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இறுதி தீர்ப்பு தொடர்பாக வழக்கு தொடுத்ததால் தான் அந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தாமதம் ஆனது என்று பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன்? என்று  கடந்த 2007&ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா எழுப்பிய வினாவுக்கும் இதேபதிலைத் தான் கலைஞர் கூறினார். இந்த விஷயத்தில் ஒரு வழக்கறிஞராக பன்னீர்செல்வத்திற்கும், அவரது செயல்தலைவருக்கும்  ஒரு சவால் விடுகிறேன். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் சம்பந்தமில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டால் ஸ்டாலினும், பன்னீர்செல்வமும் அரசியலில் இருந்து விலகத்தயாரா?

பன்னீர் செல்வத்தின் அறிக்கையில் பல இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? திமுகவின் துரோகங்களை சுட்டிக்காட்டி மருத்துவர் அய்யாவோ, மருத்துவர் அன்புமணியோ வினா எழுப்பும் போதெல்லாம் துரைமுருகன், பன்னீர்செல்வம், தாமரைச்செல்வன் போன்றவர்களை வைத்து பதில் தருவதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று கூறுவதும் என்னவிதமான அரசியல்? இவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என்கிறார்கள். இது வெட்கக் கேடு அல்லவா?

இறுதியாக ஊழல் வழக்குக்கு அஞ்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்காக திமுகவை  மருத்துவர் அன்புமணி விமர்சிப்பதாக திமுக குற்றஞ்சாற்றியுள்ளது. கூட்டணிக்காக அலைவதும் தமிழகத்திற்கு துரோகம் செய்வதும் திமுகவின் வழக்கம். எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் புகார் மீதான விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக காவிரி உரிமையை தாரை வார்த்த வரலாறும், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவினரை காப்பாற்றுவதற்காக இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு கொடுத்த வரலாறும் திமுகவுக்கு தான் உண்டு.

சொத்துக்குவிப்பு வழக்கில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் நீதிமன்றத்திற்கு அலைவதை கடலூர் மாவட்டமே அறியும். பொன்முடி, சுரேஷ்ராஜன், பெரியசாமி உள்ளிட்ட 16 திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பில் சிக்கி இன்னும் நீதிமன்றத்திற்கு  அலைந்து கொண்டிருப்பது தமிழகம் அறிந்த வரலாறு. 2ஜி ஊழல் வழக்கில் திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளர் ஒன்றரை ஆண்டுகளும், மகளிர் அணி செயலர் 6 மாதங்களும் திகார் சிறையில் அடைக்கப்பட்டது இந்தியாவே அறிந்த உண்மை.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது வழக்கு இருப்பது உண்மை. திமுக மற்றும் காங்கிரசின் தூண்டுதலில் தொடரப்பட்ட அந்த வழக்கை எதிர்கொண்டு முறியடித்து வெளிவரும் துணிச்சல் பா.ம.க.வுக்கு உண்டு. ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடுத்த கொள்கை முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. அதே போன்ற அரசியல் துணிச்சல் திமுகவுக்கு இருந்தால் இனிவரும் தேர்தல்களை தனித்து சந்திக்க முன்வர வேண்டும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...